சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகிறோம். நம் முகத்தின் நிறமானது பெரும்பாலும் அங்குமிங்குமாக வேறுபட்டு இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம், கன்னத்தில் வேறு நிறம், நெத்தியில் வேறு நிறம் என்று முகமெங்கும் முழுமை இல்லமால் இருக்கும் சருமத்தை சீராக மாற்ற சில வழிமுறைகள் இருக்கின்றன.
பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை குறுகிய காலம் மட்டுமே வெளிப்புற அழகை வழங்கும் தன்மை கொண்டவையாகும். உங்களுக்கு தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத் தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
1 ஆப்பிள், பின்னர் அரை பீட்ரூட், 1 கேரட், பிறகு சிறிய இஞ்சித்துண்டு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம். இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படும். மேலும் அது மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் சருமம் வழுவழுப்பாக இருக்கும் இது அழகை மேலும் அழகுபடுத்தும்.
3 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சள் தூள் மற்றும்1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும். உங்களின் மேனி தங்கம் போல ஜொலிக்கும். இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் யார்தான் சும்மா விடுவாங்க.
அடுத்த குறிப்பு – 4 தேக்கரண்டி சர்க்கரை, பின்னர் 2 தேக்கரண்டி காபி தூள், பின் 2 தேக்கரண்டி தேன், அடுத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தை பெற முடியும். சருமமும் மென்மையாகும்.
உங்களின் சருமத்தை பொலிவாக மாற்ற இன்னொரு டிப்ஸ் – 3 தேக்கரண்டி அரிசி மாவு, 5 தேக்கரண்டி கேரட்சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.
வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்துரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக்கிழங்கு 50 கிராம், வேப்பிலை பொடி 20 கிராம், இவற்றை எல்லாம் பொடியாக அரைத்து கொள்ளவும். 100 கிராம் பச்சை பயிறு, உலர்ந்த ரோஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் சருமம் சீரான நிறம் பெறும்.
இதைப்போல பல வழிகள் உங்களுக்காக இருக்கின்றது. இதை சரியாக பயன்படுத்தி உங்களின் சருமத்தை ஜொலிக்க செய்யுங்கள். அழகு என்பது தனியாக வருவதில்லை மனதில் இருந்து வருவது தான். ஆனால் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதில் தவறில்லை. நாம் ஏற்கனவே அழகு தான் நம்மை இன்னும் கொஞ்சம் அதிகமாக அழகாக மாற்றிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.